Friday, May 22, 2009

அம்மா பிச்சை பொடுங்கம்மா...!!!

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்...!!!



அம்மா மந்திரி பதவி இருந்தா பிச்சை போடு தாயி...!!!



பாரதி சொன்னான் "ச்சீய் ச்சீய் நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு"

Saturday, May 16, 2009

கேப்டனை நேரில் சந்தித்த கலைஞர்...!!!

தான் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போதும், திமுக வின் "மாபெரும்" வெற்றிக்கு மூல காரணமாக, அயராமல் சூறவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்த கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்து தன்மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார் கலைஞர்.

திமுகவின் சாதனைகளைக் காட்டிலும் தம்பி விஜயகாந் தான் அதிமுகவின் வாக்குகளை பிரித்து எங்கள் வெற்றிக்கு வழிவகை செய்தவர் என்றால் அது மிகையாகாது.

தம்பி நீ வாழ்க, உன் குலம் வாழ்க, மனைவி மைத்துனரோடு நீ பல்லாண்டுகாலம் வாழ்க....என்று வாழ்த்தினார் கலைஞர்.

நாளை மறுதினம் முரசொலியில் தம்பி விஜயகாந்தை வாழ்த்தி ஒரு கவிதை எழுத இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Friday, April 17, 2009

தமஅமுக --> தேர்தல் வாக்குறுதிகள்

வணக்கமுங்க.....!!!

தேர்தல் வந்து எல்லாரும் அதைக் குறித்தே பேசிக் கொண்டிருப்பதால்...ஒரு ஆர்வக்கோளாருல.. நாமும் ஒரு கட்சி ஆரம்பிச்சு தேர்தல் களத்துல குதிக்கலாம்னுதான் இந்த முயற்சி.

நம்ம கட்சியோட பேரு.... "னவ் த கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்"....1...2...3...4...5...6...7...8...9...சரி சரி சொல்லி விடுகிறேன்.....கீழ பாருங்க சார்.....ஹலோ கீழனா....கீழ குனிஞ்சு பாக்காதீங்கப்பு...உங்க ஸ்க்ரீன்ல....கீழ ஸ்க்ரோல் பண்ணி பாருங்கய்யா. ஆத்தீ...இப்பவே கண்ண கட்டுதே.

தமிழக மக்கள் அதிவேக முன்னேற்ற கழகம் (தமஅமுக)

கட்சியோட தேர்தல் வாக்குறுதிகளை பாக்கறதுக்கு முன்னாடி, நம்ம கட்சி வேட்பாள்ர்கள் குறித்து ஒரு சிறு குறிப்பு. நாம கட்சி ஆரம்பிக்கறோம்னு எப்படியோ தெரிஞ்சிகிட்டு தேர்தல்ல சீட்டு கேட்டு பயங்கரமான போட்டிங்க. இந்த போட்டிய சமாளிக்கறதுக்குத்தான் தமிழகத்தில் முதன்முறையாக "சிங்கிள் விண்டொ சிஸ்டம்" கொண்டுவத்திருக்கிறது தமஅமுக. அதாவது நம்ம கட்சி ஆபீஸ்ல இருக்கும் கதவு, ஜன்னல் அனைத்தையும் எடுத்து விட்டு, என்ட்ரன்ஸ்ல ஒன்டி ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே வைக்கப்போகிறோம். வேட்பாளர்கள் அனைவரும் அந்த ஜன்னல் வழியாக வந்து தான்....எலக்சன் சீட்டுக்கு அப்ளை பண்ண வேண்டும். அதுக்கு பேர் தான் சிங்கிள் விண்டோ சிஸ்டம்.

சரி நம்ம தேர்தல் வாக்குறுதிகளை பார்க்கலாம் வாங்க.

1. மக்கள் அதிவேகமாக முன்னேற வேண்டும் என்கிற ஒரே கொள்கையோடு தொடங்கப்பட்ட ஒரே ஒரு கட்சியான தமஅமுக ஆட்சி பீடத்தில் அமர்ந்தால், மக்களின் அன்றாட அடிப்படைத்தேவைகளை அரசாங்கமே கவனித்துக்கொள்ளும்.

2. ஒரு ரூபாய்க்கு அரிசி, ஐம்பது ரூபாய்க்கு சமையல் பொருட்கள், ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும், என்றெல்லாம் மற்ற கட்சிகள் சொல்லிக்கொண்டிருக்கும் போது, யார் வந்து கஷ்டப்பட்டு சமையல் செய்வது..என்பது தான் தமஅமுக வின் கேள்வி. எனவே தாய்மார்களின் அன்பு வேண்டுகோளின் படி வேளா வேளைக்கு அரசாங்கமே உங்கள் வீடுதேடி சாப்பாட்டை அணுப்பும். காலையில் இட்லி, பூரி, தோசை, பொங்கல், வடை ஆகியவற்றில் எது வேண்டும் என்று முதல் நாள் இரவே அரசு இணைய தளத்தில் பதிவு செய்து விட்டால் போதும், அடுத்த நாள் காலை சரியாக ஏழு மணிக்குள்ளாக பொது மக்களுக்கு டோர் டெலிவரி செய்யப்படும். மதிய உணவாக தயிர் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், வெஜ் பிரியாணி போன்றவை தபால் மூலமாக பார்சலில் அணுப்பி வைக்கப்படும். வாரம் இரு முறை அசைவமும் வழங்கப்படும். இரவு நேரத்தில் ஆங்காங்கே நாங்கள் ஏற்படுத்த இருக்கும் அரசு நியாய விலை உணவகங்களில் இலவசமாக எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

3. இலவச கலர் டிவி என்கிறார்கள்....ஆனால்... நாள் முழுவதும் உட்கார்ந்து பார்த்தால் தான் தெரியும் அதன் கஷ்டம். ஓய்வாகவும் சாய்வாகவும் அமர்ந்து கொண்டு இலவச கலர் டீவி பார்க்க வசதியாக வீடுதோறும் இலவச் சாய்வு நற்காலியும், டியுரோப்ளெக்ஸ் மெத்தையும் வழங்கப்படும். மேலும் தமஅமுக ஆட்சிக்கு வந்தால், கலர் டிவியுடன் சேர்த்து கேபிள் கனெக்சனும், மின்சாரமும், சம்சாரமும் இலவசமாக வழங்கப்படும். மன்னிக்கவும், எங்கள் கட்சியினர் மீது எங்களுக்கே நல்ல நம்பிக்கை இல்லாத காரணத்தால் சம்சாரம் வழங்குவது இயலாத காரியம். எனவே சம்சாரம் மட்டும் நீங்களாக தேடிக்கொள்ள வேண்டுகிறோம்.

4. குடிமக்களின் நலன் கருதி, தமஅமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை பட்டி தொட்டிகள் எங்கும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு குவாட்டர் இலவசமாக வழங்கப்படும். அதற்கும் மேலாக குடிக்க விரும்புபவர்கள் உங்கள் குடும்ப அட்டையினை அடையாளமாக காட்டி மலிவு விலையில் பாட்டில்களை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

5.செல்போன் இலவசம் என்கிறார்கள், கிரெடிட் கார்டு, பேங் லோன், மாமன், மச்சான் போன்றவர்கள் தினமும் ஆயிரம் போன் செய்து மக்களை எவ்வளவு கஷ்டப்படுத்துகிறார்கள் என்பதை தமஅமுக நன்றாக அறியும். என்வே சீன தேசத்தில் இருந்து இளம் பெண்களை வரவழைத்து உங்கள் தனிப்பட்ட செய்லாளராக நியமனம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் போன் தொந்தரவுகள் இருக்காது.

6. மக்களின் அனைத்து தேவைகளையும் அரசங்கமே கவனித்துக் கொள்ளுமாதலால், சும்மா இருப்போர் சங்கம், வெட்டிக்கதை பேசுவேர் நல வாரியம், இலவச் கலர் டிவி பார்ப்போர் இயக்கம், குடிமக்கள் கூட்டம், போன்ற இயக்கங்களைத் தொடங்கி மக்கள் நல பணிகளை சீரும் சிறப்புமாக செய்வது தமஅமுக வின் தீவிர கொள்கைகளில் ஒன்றாகும்.

இவ்வாறாக தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகவும், தமிழக மக்கள அதிவேகமாக முன்னேற வேண்டும் என்கிற உண்மையான கொள்கையுடனும் தேர்தல் களம் காணும் தமஅமுக விற்கு உங்கள் பொண்ணான வாககுகளையெல்லாம் வாரி வாரி வழங்குமாறு வேண்டுகிறோம்.

நமது கொள்கைகளுக்கு பெருத்தமாக தேர்தல் கமிஷனிடம் நாம் வேண்டிக் கேட்டுள்ள தேர்தல் சின்னம்....இதோ.

நன்றி...!!!
(தமஅமுக)

Wednesday, April 15, 2009

தேர்தல்

வணக்கமுங்க...,

"தேர்தல்"

சாலை வசதி,

சாக்கடை வசதி,

பள்ளிக்கூடம்,

பஸ் வசதி,

இவையெல்லாம் தருவதாய்ச்சொல்லி

இறுதியில் பீரும், பிரியாணியும்,

ஐம்பதும் மட்டுமே தந்து,

ஐந்தாம் முறையாக வெற்றிபெற்றோம்.

Sunday, April 12, 2009

அன்புசிவம் அவர்களின் மன நலம் பேணுவோம்

வணக்கமுங்க...,

வாழ்க வளமுடன்...!!!

நண்பர் அன்புசிவம் அவர்களின் "மன நலம் பேணுவோம்" என்கிற தொகுப்பினை இங்கே உங்களுக்காக இணைத்துள்ளேன்.
மன நலம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற அவரது முயற்சியில் என்னால் ஆன சிறு பங்களிப்பு.

இத்தொகுப்பைக் குறித்த உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை www.anbusivam.com என்கிற வலைப்பூவிலோ அல்லது sivupalani@gmail.com என்கிற அவரது மின்னஞ்சல் முகவரியிலோ பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

Anbusivam's Mana Nalam Penuvom
Anbusivam's Mana Nalam Penuvom Anbusivam


இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதியளித்த நண்பர் அன்புசிவம் அவர்களுக்கு என் நன்றிகள் பல.

Friday, April 10, 2009

ஜனநாயகம் Vs பணநாயகம்

வணக்கமுங்க,

வாழ்க வளமுடன்.

சூப்பர் நட்சத்திர நடிகர் மாதிரி தான் இந்த பணமும். எப்போ வரும், எப்டி வரும், எங்கிருந்து வரும் அப்டிங்கறதெல்லாம் தெரியாது, ஆனா வரவேண்டிய தேர்தல் சமயத்தில கரெக்ட்டா வந்திரும். வேட்பாளர்களின் சுய ஒப்புதலே கோடிகளில் சொத்துவிபரம் சொல்லும் போது, உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பது நாமெல்லாம் யூகிக்க வேண்டிய போட்டி தான். கோடிகளும், கேடிகளும் இல்லாவிட்டால் இப்போதெல்லாம் தேர்தலில் போட்டி கூட போட முடியாது, பிறகு தானே வெற்றி, தோல்வி எல்லாம். பெரும் கட்சிகள் கூட, தனது வேட்பாளர்களை தேர்வு செய்வது, வெரும் பணபலம் ஒன்றை மட்டுமே வைத்துத்தான் என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இதுவரை இல்லாதவர்கள் கூட தன்னிடம் தண்ணீராக செலவு செய்ய பணம் இருந்தால் எந்த ஒரு கட்சியிலும் சீட் வங்குவது மிகவும் எளிது. கல்வித்தகுதி என்ன?, மக்களுக்காக சேவை செய்யும் மனப்பான்மை இருக்கிறதா?, நேர்மையானவரா?, நல்ல ஒழுக்கம் உடையவரா?, என்கிற கேள்விகளுக்கெல்லாம் இப்போது இடம் இல்லை. எவ்வளவு கோடிகளும், எத்தனை கேடிகளும் உங்களிடம் இருக்கிறது என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

பெரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட இப்போதெல்லாம், நேர்மையானவர்களாக இருப்பதில்லை என்பது வெட்கித்தலை குனிய வேண்டிய ஒன்றாகும். குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியில் இருப்பவர்களுக்கெல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும் போது தான் இவர்களின் சுய ரூபம் தெரிகிறது. தேசிய செய்தித் தொலைக்காட்சிகளின் நேரடி விவாதத்திற்கு வரும் போது மட்டும் என்னமோ பெரிய யோக்கியர்கள் போல் பேசும் அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது மிகவும் அருவருப்பான புழுபூச்சிகளைப் பார்ப்பது போல் தோன்றுகிறது.

பணம், பதவி, புகழ் இவை தவிற மக்களின் நலன் கருதியே நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று வெரும் வாய்ப்பேச்சாக இல்லாமல், மனப்பூர்வமாகச் சொல்லும் அரசியல்வாதிகள் இந் நாட்டிலும் உண்டு என்பது நம்மால் கனவிலும் நினைக்கமுடியத ஒன்றாகும். ஏதோ இங்கொன்றும் அங்கொன்றும் அரிதாகக் காணக்கிடைப்பவர்களூம் கூட பண நயக்த்தின் முன்னால் எதுவும் செய்ய இயலாமல் தவிப்பது வேதனையானது,



பணம் இருந்தால் மட்டுமே அரசியலுக்கு வர முடியும் என்கிற கீழ்த்தரமான நிலையில் இருந்து நாம் மீண்டு வரும் வரை எத்தனை தலைவர்கள் வந்தாலும், எத்தனை தேர்தல்கள் வந்தாலும் சதாரண ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதையெல்லாம் பார்க்கும் போது, ஜன நாயகம் என்பது எட்டாக்கனியாகி விடுமோ என்கிற அச்சம் தான் மேலோங்கி நிற்கிறது

தேர்தல் காலத்தில் ஆகும் செலவுகள் அனைத்தையும் அரசாங்கமே செய்யும், வேட்பாளர்கள் யாரும் ஒரு பைசாகூட தங்கள் சொந்த பணத்தையோ, கட்சியின் பணத்தையோ செலவு செய்யக் கூடது என்கிற சட்டம் வரவேண்டும்.

பணம் தோற்று, ஜனம் வென்று வரும் நாள் என்று வருமோ....???

Wednesday, April 1, 2009

இது ஒரு தேர்தல் காலம்...!!!

வணக்கமுங்க,

இப்போல்லாம் எங்க போனலும் எலக்சன் பத்தி தான் பேச்சு போங்க. வேற ஏதையும் கேட்க முடிவதில்லை. பஸ்ல, ரயில்ல, நடந்து போகையில கூட தேர்தல் பற்றியும், அரசியல் வாதிகளைப்பற்றியும் எல்லோரும் விமர்சனம் செய்யும் காலம் இது.

தேர்தல் வந்தாலே ஒரு கலை கட்டிவிடுகிறது என்கிறான் நண்பன். ஆனால் தேர்தல் என்பது ஏதோ போனமா, எதோ ஒரு நல்ல கட்சிக்கோ அல்லது நல்ல வேட்பளருக்கோ ஓட்டைப் போட்டோமா, வந்தோமான்னு இருந்த காலம் எல்லாம் மலையேறிப்போய் பல வருடங்களாகி விட்டது. இதை நாம் உண்ர்ந்ததாகவே தெரியவில்லை என்பது மிகுந்த வேதனையாக இருக்கிறது. காமராஜரைப் போன்ற, தோழர் ஜீவாவைப் போன்ற அரசியல் தலைவர்கள் இருந்த காலத்தில் அப்படியேல்லாம் இருந்திருந்தால் சரி தான், ஆனால் இன்றைய அரசியல் வியாதிகள் மத்தியிலும் அப்படியேதான் இருப்பேன் என்று நாம் பிடிவாதம் பிடிப்பது முறையாகாது.

சுதந்திரப் போராட்டம் முடிவடைந்த காலத்தில் மக்கள் சேவை, நாட்டின் நலனுக்காக சுய நலன் கருதாமல் உழைக்க வேண்டும், என்கிற அடிப்படையில் தான் இந்திய அரசியல் களம் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அதில் பொது மக்கள் சேவையை விடவும் தம்மக்கள் சேவையே பெரிது என்றெண்ணும் கொடியவர் வாழும் காலம் இது. தனக்காகவும், தன்னைச்சார்ந்தவர்களுக்காவும், தன்னை துதிபாடுகிறவர்களுக்காகவும் எதுவும் செய்யத்தயாரக இருக்கும் அரசியல் வியதிகள் நாட்டை ஆட்கொண்டு விட்டனர் என்பது ஊறரிந்த ராசியம். எல்லாம் தெரிந்தும் "தலைவா வாழ்க" என்று கூவிக் கத்துகின்ற கூலிக்கூட்டங்கள் இருக்கும் வரை வியாதிகள் இருக்கவே செய்யும். ஒரு நூறும், ஒரு பீரும் இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் காலம் கெட்டழிந்து போகும் வரை இந்நோயின் பிடியில் இருந்து யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது.

குடும்ப அரசியல், குடும்ப அரசியல் என்று கதறிக் கூவுகின்றோரும், தனக்கென்று வந்துவிட்டால் விவசாயியின் மகன் விவசாயம் செய்வதில் தவறேதும் இல்லை என்று நியாயப்படுதும் காலமிது. நானே எனது வாரிசுகளோ பதவிக்கு வரவே மாட்டோம் என்று அடித்து சத்தியம் செய்தோரும் தம்மக்கள் வகிக்கும் பதவிக்காக உயிரையும் கொடுத்துப் போராடியதை உலகம் உற்றுப்பார்த்துக் கொண்டிதானிருக்கிறது. அதில் நூறில் ஒரு பகுதியை நாட்டின் நலம் குறித்தும் சிந்திகக முயற்சியாவது செய்திருக்கலாம்.

இப்போதாவது விழித்துக்கொள்வோம், மக்கள் நலன் மட்டுமே பெரிதெனக்கருதும் நல்லோரை தேர்ந்தேடுப்போம், இத்திருநாட்டை அரசியல்வியாதியின் கோரப் பிடியில் இருந்து விடுவிப்போம்.

Saturday, March 21, 2009

தேர்தல் நேரத்தில் பணப்புழக்கம் எங்கிருந்து துவங்குகிறது...?

வணக்கமுங்க,

மகிழ்ச்சியா இருக்கீங்களா..? வாழ்க வளமுடன்.

போன வாரம் பெங்களூருவில் இருந்து ஊருக்கு போனபோது, மாமா சொன்னாரு "எலக்சன் வருதுல்ல இனிமே பணப்புழக்கம் நல்லா இருக்கும்". என்னங்கடா இது பணப்புழக்கதிற்கும் தேர்தலுக்கும் அவ்வளவு தொடர்பா.....???

சரி, முன்னெல்லாம் சன் ம்யூசிக்கில் வரும் ஹேமா சின்ஹா கேள்வி கேட்டு, பதில் வேண்டி க்ளு குடுப்பாங்க ஞாபகம் இருக்கா....? அது மாதிரி ஒரு கேள்வி.

பணப்புழக்கம் எங்கிருந்து துவங்குகிறது...? குறிப்பாக தேர்தல் நேரத்தில்...?

தெரியலையா...?

இதோ க்ளூ...

1. இந்த இடம் தமிழ் நாட்டின் மூலை முடுக்குகெல்லாம் இருக்கிறது. மினி பஸ், மின்சாரம், சாக்கடை போன்ற அடிப்படை வசதியேதுமில்லாத சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் கூட உண்டு.

தெரியலையா...?

2. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 50 பேர் அந்த இடத்திலேயே மரணித்தாலும், இரண்டே நாட்களில் மீண்டும் சகஜ நிலைக்குத்திரும்பி வழக்கம் போல் உற்சாகமாக செயல் படும் இடம் அது.

நல்லா யோசனை செய்தும் தெரியலையா...?

3. வழக்கமாக மாலை நேரங்களில் தான் கடைத்தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும், ஆனால் இங்கு அதிகாலை டீக்கடைகள் திறப்பதற்க்கு முன்பிருந்தே இருந்தே குடிமக்கள் காத்துக்கிடப்பார்கள்.

இன்னும் தெரியலையா...?

4. அந்த இடத்தோட பேர்ல முதல் எழுத்து "டா" கடைசி எழுத்து "மாக்".

இன்னும் தெரியலையா...? அட போங்க சார்... காமெடி பண்ணாதீங்க...!!!

இதனால நமக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருது, ஆனா ஏழை வீட்டுக் குழந்தைகள் ஒரு வேளையாவது நல்லா சாப்பிடுதா, கிழிசல் இல்லாம ஆடை உடுத்துதா, பள்ளிக்கூடம் போகுதா....? இதெல்லாம் யாருக்கு வேணும். நமக்கு வேண்டியதெல்லாம் பணம், பதவி, புகழ், இதெல்லாம் இப்போ நமக்கு வெறியாக மாறிவருகிறது. இவையெல்லாம் வேணும்னா என்னவேனாலும் செய்ய தயாரா இருக்கோம்ங்கறது ரொம்பவே வெட்கமாக இருக்கு...என்னது வெட்கமா...???...யாருக்கு...??? யாருக்கோ..!!!

நமக்கென்ன கவலை...எங்கே இந்த தற்காலிகமான பணம், பதவி நம்மவிட்டுப் போய்டுமோங்கறது மட்டும் தானே. பொறுப்பில்லாத குடிகாரப்பாவிகள், பதர்கள் இங்கே இருக்கிற வரைக்கும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு, சுரண்டியெடுத்து கஜானாவை நிரப்புவது ஒன்று மட்டுமே நமது நோக்கம்.

ஆகவே எனதருமை குடிமக்களே, குடியும் குடித்தனமுமாக வாழிய பல்லாண்டு.

Friday, March 13, 2009

கண்டதும் காதல் வருமா...?

வணக்கமுங்க,

நல்லா இருக்கீங்களா..? வாழ்க வளமுடன்.

எனக்கு ரொம்ப நாளா ஒரு பெரிய சந்தேகம், கண்டதும் காதல் வருமா சார்...?

ஸ்கூல்ல இருந்தே எத்தனையோ பெண்ணுங்கள பாத்திருக்கேன், ஆனா கண்டதும் காதல் வருமா அப்டிங்கற சந்தேகம் மட்டும் இன்னும் தீரல. எத்தனையோ தமிழ் சினிமா பாத்துமா இந்த கண்டதும் காதல்ல நம்பிக்கை வரலைன்னு நண்பன் கேட்கிறான். அட போடா, தமிழ் சினிமா பாத்துதான் கண்டதும் காதலே வெரும் மாயைன்னே தெரிஞ்சுகிட்டேன் என்பது என் பதில்.

நீங்களே சொல்லுங்க பாஸூ, பஸ் ஸ்டாப்ல பாத்தவுடனே வருது, பஸ்ல டிக்கெட் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும், எடுக்க சில்லரை இல்லைன்னாலும் இந்த பாழாப்போன காதல் வருது, போஸ்ட் ஆப்பீஸ்ல ஸ்டாம்பு ஒட்டறதுக்குளே வருது, கர்ச்சீப்பை தவர விட்டாலும் வருது, துப்பட்டா பறந்தாலும் வருது, தெரியாம இடிச்சிகிட்டா வருது, தெரிஞ்சே இடிச்சாலும் வருது, லைப்ரரியில புக் எடுத்தா வருது, எடுத்த புக்கை தவறவிட்டா வருது, அட இவ்வளவு ஏன் சார்....கால் செருப்பு அறுந்து போனாலும் காதல் வருது சார்.

என்ன தான் செஞ்சாலும், கழுதை நமக்கு ஒரு மண்ணும் வர மாட்டேங்குதே.... நானே இந்த வயித்தெரிச்சல்ல இருக்கும் போதுதான் பசங்க போன் பண்ணி, என்ன மாப்ளே இன்னிக்கு சன்டே.... நாட் கோயிங் அவுட்....??? அப்டின்னு ஸ்டைலா கேள்வி கேக்கும் போதே தெரியும் பக்கிப்பய ஏதோ பிகரை கரெக்ட் பண்ணி...பிக்கப்பும் பண்ணி....எங்கேயா...ஒரு ஷப்பிங் மால்ல வெட்டியா சுத்திகிட்டு இருக்கு அப்படிங்கறது.

காதல், காதல்னா சும்மாவா...? உனக்குத்தான் காதலிக்க நேரமில்லைன்னாலும், காதலுக்கு மரியாதை வேண்டாமா...? என்பது நண்பர்கள் வாதம்.

கண்டதும் காதல்ங்கறது வெறும் டுபாக்கூர் என்பது என் எண்ணம்.....அதேப்படிங்க பாத்தவுடனே காதல் வருது...? காதல் ஒரு ஆழமான உணர்வு இல்லையா...? ஒருவருக்கொருவர் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய உறவு இல்லையா..? பாத்தவுடனே வருவது வெரும் உடல் கவர்ச்சி, அலைபாயும் மனசோட ஈர்ப்பு, அது வெரும் காமம் தானே தவிர...காதல் கிடையவேகிடையாது. முதலில் ஏற்படுகிற உடல்கவர்ச்சி வேண்டுமானால் பின்னால் காதலாக மலரக்கூடுமேயன்றி, கண்டதும் காதல் என்பது உலகில் இல்லை, இல்லவே இல்லை.

ஆகவே நண்பர்களே...!!! கண்டதும் வருவது காமம்......காதல் இல்லை.

அன்புடன்,
இமைசோரான்

Tuesday, March 3, 2009

இணையத்தில் அபிஷேகம்...!!!

வணக்கமுங்க,

எப்பவோ ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுனது, நானா இதை கவிதை அப்பிடின்னு சொல்லிக்குவேன்....ஆனா நண்பர்கள் யாரும் உடன்படுவது இல்லை.

நீங்களாவது படிச்சு சொல்லுங்க.......!!!

அவ்வைப் பாட்டி சொல்லித்தந்த
ஆத்திச்சூடி படிச்சது போய்,
அயல் நாட்டு மோகம் கொண்டு
ஆங்கிலத்தில் படிக்கின்றோம்.

ஆத்தா அரைச்சு வச்ச
மீன் கொழம்பு வசனை போய்,
பீட்ஸாவும் பர்கரையும்
அப்படியே விழுங்குகின்றோம்.

தபால்காரர் வருவாருன்னு
தவமிருந்த காலம் போய்,
இன்பாக்ஸில் வந்துசேரும்
ஈமெயிலுக்காய் காத்திருக்கின்றோம்.

அரசமரத்துக்கடியில குத்தவச்சு
அன்னாடம் கதை பேசிய காலம் போய்,
அரசாங்க பார்க்கு பெஞ்சில்
அமர்ந்து கொண்டு கதைக்கின்றோம்.

இயற்கையோடு இணைந்து
இன்பமாக வாழ்ந்தது போய்,
இயந்திரங்கள் துணையோடு
இறுதி நாட்கள் வாழுகின்றோம்.

இத்தனையும் மாறும்போது
இறைவா...!!! நீ மட்டும் விதிவிலக்கா,
இப்போதெல்லாம் உனக்கு
இணையத்தில் தான் அபிஷேகமே செய்கின்றோம்.
அன்புடன்,
இமைசோரான்

Friday, February 27, 2009

நானும் வலைப்பூ ஆரம்பிச்சிட்டேன்......!!!

அன்புடையீர்,

தமிழ்கூறும் நல் உலகுக்கு என் அன்பான வணக்கங்கள்.

"இப்போல்லாம் ப்ளாக் எழுதுவது தான் ஸ்டைல், அமீர்கான் முதல் ஆர்யா வரை எல்லாரும் எழுதுறாங்க.... நீயும் எழுதலாமே" என்றான் நண்பன். ஆனா தமிழ்ல எழுதி பல வருசம் ஆச்சே, பள்ளிக்கூடத்தில பரிட்சை பேப்பர்ல கூட, என்னோட ப்ளூ இங்கை விட தமிழ் அய்யாவோட ரெட் இங்க் தானே அதிகமா இருக்கும். இனிமேல் நாம எங்கே எழுதுறது, அப்படியே எழுதினாலும் என்ன எழுதுறது, அதையும் மீறி யாருவந்து என்னோட கிறுக்கல்களை எல்லாம் பொறுமையா உக்காந்து படிக்கப்போறாங்க அப்படிங்கற எண்ணம் தான் மனதில் மேலோங்கி நின்றது.

சரின்னு சொல்லி வலை உலகை ஒரு வலம் வந்தா தான் புரியுது, எத்தனை வகையான தமிழ் வலைப்பூக்கள் பூத்துக்குலுங்கி இனிய நறுமனம் வீசிக்கொண்டிருப்பது. ஒரு முடிவுக்கு வந்தேன், நாமும் அழகிய பூச்செடி ஒன்ன பதியம் போட்டு வெக்கலாமேன்னு, அதுவும் கொஞ்ச நாள்ல நல்லா வளந்து, அழகா பூ பூத்து, இனிய மனம் பரப்பும் வலைப்பூவா மலரும்...அப்படிங்கர ஒரு அபார நம்பிக்கை மனசுக்குள்ள.

இப்போ வலைப்பூவில் எழுதறதுன்னு முடிவானதுக்கப்புறம், என்ன பேர்ல எழுதறது அப்படிங்கற பெரும் குழப்பம். நாலு வருசத்துக்கு முன்னடி பன்னாட்டு நிறுவனம் ஒன்னுல வேலைக்கு சேந்த புதுசுல ஒரு ஆர்வக்கோளாருல "சிட்டுக்குருவி" அப்படின்னு ஒரு வலைக்குழு ஆரம்பிச்ச நினைப்பு வரவே அந்த பேர்ல எழுதலாமேன்னு பாத்தா, ப்ளாக்கர் அந்த பேர் இல்லைன்னு சொல்லிருச்சு. அடுத்து என்னென்னமோ யோசனையெல்லாம் செய்தும் உருப்படியான ஒரு பேரும் கிடைக்கல. பள்ளிக்கூட நாள்ல இருந்தே எட்டையபுரத்து மாமேதை, மகாகவி பாரதியின் எழுத்து மேல ஒரு தீராத காதல், பாரதியோடு தொடர்புடைய பேர இருந்தா ரொம்ப நல்லா இருக்குமேன்னு வெகு நேரம் யோசனை செய்த போதுதான் நினைவுக்கு வந்தது போன வார ஆனந்த விகடனில் வெளியான க.சீ.சிவகுமார் அவர்களின் "இந்த நாள்...இனிய நாள்" என்ற சிறுகதையும் அதில் வந்த "இமைசோரான்" என்ற அற்புதமான இந்த பேரும்.

மனமார்ந்த நன்றி, நண்பர் க.சீ.சிவக்குமார் அவர்களுக்கு.

என்னமோ போங்க எல்லா பாரத்தையும் என்மேலயே போட்டு இந்த வலைப்பூவ தொடங்கிட்டேன், இனிமேல் தான் உக்காந்து உருப்படியா என்ன எழுதுறதுன்னு யோசிக்கணும்.