Saturday, October 16, 2010

மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி

மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு நகர்களில் விநியோகிக்கப்படும் நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய தமிழகம் என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது...

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?. நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்? அவர் சிரித்தபடி சொன்னார், என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!

என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்?

மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம்.

தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி! என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, July 20, 2010

தமிழக, மத்திய அரசுகளைக் கண்டித்து நாகர்கோவிலில் மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்

This is copied from http://www.thatstamil.com

நாகர்கோயில்: மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டியும் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கொட்டிய மழையின் நடுவில் குடைகளைக்கூட பிடிக்க மறுத்து மீனவர்கள் போராடினார்கள்.

இதில் தமிழர்களம் அமைப்பின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில்,

கடந்த காலங்களில் மீனவர்களை ஒடுக்குவதிலும் அவர்களின் போராட்டங்களை நசுக்குவதிலுமே மத்திய மாநில அரசுகள் முனைப்பு காட்டுகின்றனவேயொழிய அவர்களைப் பாதுகாப்பதிலும் உயர்த்துவதிலும் இழப்பீடுகள் அளிப்பதிலும் எள்ளளவும் கரிசனை கொள்வது கிடையாது.

1974 -ல் தி.மு.க. ஆட்சியின்போது பெருந்துறை மீனவர்களை ஒருவார காலமாக அடித்து உதைத்து ரத்தம் சிந்தச் சிந்த மீனவப் பெண்களை நிர்வாணமாகச் சுடுமணலில் நெடுநேரம் உட்கார வைத்த கொடுமை இந்த மண்ணில்தான் நடந்தது.

எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் மெரினா கடற்கரையை அழகுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கடற்கரைக் குப்பங்கள் வன்முறை வழியில் அகற்றப்பட்டன. மீனவர்கள் சிந்திய குருதியில் கடற்கரை நனைந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். மீனவ நண்பனாக திரைப்படத்தில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜாங்கிட் தலைமையில் 26 வாகனங்களில் இரும்புத் தடிகளோடு தமிழகக் காவல்துறையினரை பெருமணல் கிராம மக்கள் மீது ஏவிவிட்டு பெண்டு பிள்ளைகளையும் போராடிய அத்தனைப் பேரையும் ஏன், ஒரு நொண்டிச் சிறுவனையும்கூட விட்டு வைக்காமல் அடித்துத் தள்ளி குருதி சிந்த வைத்தது செயலலிதா அரசு.

இந்தத் திராவிடங்களின் ஆட்சியில்தான், ராமேசுவரம் நாகப்பட்டிணம் உள்ளிட்ட கிழக்குக் கடலில் இதுவரை 534 தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறிக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் மத்திய மாநில அரசுகள் கொலைகாரச் சிங்கள அரசுக்குத்தான் இன்றுவரை முட்டுக் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் 50 லட்சம் மீனவர்கள் இருந்தும் அரசின் இந்த எடுத்தெறிந்த போக்கு நமக்குக் கடும் சினத்தையே உண்டு பண்ணுகிறது .

அகிம்சைப் போராட்டங்களையெல்லாம் காந்தி தேசம் இதுநாள்வரை காலிலிட்டுத்தான் மிதித்திருக்கிறது. அமைதி வழிப் போராட்டங்கள், மனுக்கொடுத்தல், உண்ணாநோன்பு போன்ற போராட்ட வடிவங்களை அரசு இன்று எட்டிக்கூட பார்ப்பதில்லை. அப் போராட்ட மொழி அரசுக்குப் புரிவதுமில்லை. ஆட்சியாளர்களின் செவிகளுக்கு எட்டுவதுமில்லை. இப்படிப் புறக்கணிப்பதன் மூலம் அரசே வன்முறை வழிகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. இருப்பினும் நாம் பொறுமையோடு சனநாயக வழிமுறைகளையே முன்னெடுப்போம்! வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பொறுக்கி திராவிடக் கட்சிகளையும் இந்திய தேசியக் கட்சிகளையும் முற்றாகப் புறக்கணித்து மீனவத் தமிழர்களாய் நாம் எழுந்து நம் வலுவை மெய்ப்பிப்போம்.

அரசுக்குக் கோடி கோடியாய் அன்னியச் செலாவணி வருவாய் ஏற்படுத்தித் தரும் உழைக்கும் மக்களான தமிழக மீனவர்களின் போராட்டங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் செவி மடுக்காத தமிழக அரசை சனநாயக வழியில் தூக்கி எறிந்துவிட்டு புதிய சமுதாயம் படைப்போம் என்றார்.

பின்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அனைத்துக் கோரிக்களையும் அரசின் பார்வைக்குக் கொண்டு செல்வதாக வாக்களித்தார்.

Friday, May 22, 2009

அம்மா பிச்சை பொடுங்கம்மா...!!!

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்...!!!



அம்மா மந்திரி பதவி இருந்தா பிச்சை போடு தாயி...!!!



பாரதி சொன்னான் "ச்சீய் ச்சீய் நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு"

Saturday, May 16, 2009

கேப்டனை நேரில் சந்தித்த கலைஞர்...!!!

தான் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போதும், திமுக வின் "மாபெரும்" வெற்றிக்கு மூல காரணமாக, அயராமல் சூறவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்த கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்து தன்மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார் கலைஞர்.

திமுகவின் சாதனைகளைக் காட்டிலும் தம்பி விஜயகாந் தான் அதிமுகவின் வாக்குகளை பிரித்து எங்கள் வெற்றிக்கு வழிவகை செய்தவர் என்றால் அது மிகையாகாது.

தம்பி நீ வாழ்க, உன் குலம் வாழ்க, மனைவி மைத்துனரோடு நீ பல்லாண்டுகாலம் வாழ்க....என்று வாழ்த்தினார் கலைஞர்.

நாளை மறுதினம் முரசொலியில் தம்பி விஜயகாந்தை வாழ்த்தி ஒரு கவிதை எழுத இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Friday, April 17, 2009

தமஅமுக --> தேர்தல் வாக்குறுதிகள்

வணக்கமுங்க.....!!!

தேர்தல் வந்து எல்லாரும் அதைக் குறித்தே பேசிக் கொண்டிருப்பதால்...ஒரு ஆர்வக்கோளாருல.. நாமும் ஒரு கட்சி ஆரம்பிச்சு தேர்தல் களத்துல குதிக்கலாம்னுதான் இந்த முயற்சி.

நம்ம கட்சியோட பேரு.... "னவ் த கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்"....1...2...3...4...5...6...7...8...9...சரி சரி சொல்லி விடுகிறேன்.....கீழ பாருங்க சார்.....ஹலோ கீழனா....கீழ குனிஞ்சு பாக்காதீங்கப்பு...உங்க ஸ்க்ரீன்ல....கீழ ஸ்க்ரோல் பண்ணி பாருங்கய்யா. ஆத்தீ...இப்பவே கண்ண கட்டுதே.

தமிழக மக்கள் அதிவேக முன்னேற்ற கழகம் (தமஅமுக)

கட்சியோட தேர்தல் வாக்குறுதிகளை பாக்கறதுக்கு முன்னாடி, நம்ம கட்சி வேட்பாள்ர்கள் குறித்து ஒரு சிறு குறிப்பு. நாம கட்சி ஆரம்பிக்கறோம்னு எப்படியோ தெரிஞ்சிகிட்டு தேர்தல்ல சீட்டு கேட்டு பயங்கரமான போட்டிங்க. இந்த போட்டிய சமாளிக்கறதுக்குத்தான் தமிழகத்தில் முதன்முறையாக "சிங்கிள் விண்டொ சிஸ்டம்" கொண்டுவத்திருக்கிறது தமஅமுக. அதாவது நம்ம கட்சி ஆபீஸ்ல இருக்கும் கதவு, ஜன்னல் அனைத்தையும் எடுத்து விட்டு, என்ட்ரன்ஸ்ல ஒன்டி ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே வைக்கப்போகிறோம். வேட்பாளர்கள் அனைவரும் அந்த ஜன்னல் வழியாக வந்து தான்....எலக்சன் சீட்டுக்கு அப்ளை பண்ண வேண்டும். அதுக்கு பேர் தான் சிங்கிள் விண்டோ சிஸ்டம்.

சரி நம்ம தேர்தல் வாக்குறுதிகளை பார்க்கலாம் வாங்க.

1. மக்கள் அதிவேகமாக முன்னேற வேண்டும் என்கிற ஒரே கொள்கையோடு தொடங்கப்பட்ட ஒரே ஒரு கட்சியான தமஅமுக ஆட்சி பீடத்தில் அமர்ந்தால், மக்களின் அன்றாட அடிப்படைத்தேவைகளை அரசாங்கமே கவனித்துக்கொள்ளும்.

2. ஒரு ரூபாய்க்கு அரிசி, ஐம்பது ரூபாய்க்கு சமையல் பொருட்கள், ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும், என்றெல்லாம் மற்ற கட்சிகள் சொல்லிக்கொண்டிருக்கும் போது, யார் வந்து கஷ்டப்பட்டு சமையல் செய்வது..என்பது தான் தமஅமுக வின் கேள்வி. எனவே தாய்மார்களின் அன்பு வேண்டுகோளின் படி வேளா வேளைக்கு அரசாங்கமே உங்கள் வீடுதேடி சாப்பாட்டை அணுப்பும். காலையில் இட்லி, பூரி, தோசை, பொங்கல், வடை ஆகியவற்றில் எது வேண்டும் என்று முதல் நாள் இரவே அரசு இணைய தளத்தில் பதிவு செய்து விட்டால் போதும், அடுத்த நாள் காலை சரியாக ஏழு மணிக்குள்ளாக பொது மக்களுக்கு டோர் டெலிவரி செய்யப்படும். மதிய உணவாக தயிர் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், வெஜ் பிரியாணி போன்றவை தபால் மூலமாக பார்சலில் அணுப்பி வைக்கப்படும். வாரம் இரு முறை அசைவமும் வழங்கப்படும். இரவு நேரத்தில் ஆங்காங்கே நாங்கள் ஏற்படுத்த இருக்கும் அரசு நியாய விலை உணவகங்களில் இலவசமாக எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

3. இலவச கலர் டிவி என்கிறார்கள்....ஆனால்... நாள் முழுவதும் உட்கார்ந்து பார்த்தால் தான் தெரியும் அதன் கஷ்டம். ஓய்வாகவும் சாய்வாகவும் அமர்ந்து கொண்டு இலவச கலர் டீவி பார்க்க வசதியாக வீடுதோறும் இலவச் சாய்வு நற்காலியும், டியுரோப்ளெக்ஸ் மெத்தையும் வழங்கப்படும். மேலும் தமஅமுக ஆட்சிக்கு வந்தால், கலர் டிவியுடன் சேர்த்து கேபிள் கனெக்சனும், மின்சாரமும், சம்சாரமும் இலவசமாக வழங்கப்படும். மன்னிக்கவும், எங்கள் கட்சியினர் மீது எங்களுக்கே நல்ல நம்பிக்கை இல்லாத காரணத்தால் சம்சாரம் வழங்குவது இயலாத காரியம். எனவே சம்சாரம் மட்டும் நீங்களாக தேடிக்கொள்ள வேண்டுகிறோம்.

4. குடிமக்களின் நலன் கருதி, தமஅமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை பட்டி தொட்டிகள் எங்கும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு குவாட்டர் இலவசமாக வழங்கப்படும். அதற்கும் மேலாக குடிக்க விரும்புபவர்கள் உங்கள் குடும்ப அட்டையினை அடையாளமாக காட்டி மலிவு விலையில் பாட்டில்களை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

5.செல்போன் இலவசம் என்கிறார்கள், கிரெடிட் கார்டு, பேங் லோன், மாமன், மச்சான் போன்றவர்கள் தினமும் ஆயிரம் போன் செய்து மக்களை எவ்வளவு கஷ்டப்படுத்துகிறார்கள் என்பதை தமஅமுக நன்றாக அறியும். என்வே சீன தேசத்தில் இருந்து இளம் பெண்களை வரவழைத்து உங்கள் தனிப்பட்ட செய்லாளராக நியமனம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் போன் தொந்தரவுகள் இருக்காது.

6. மக்களின் அனைத்து தேவைகளையும் அரசங்கமே கவனித்துக் கொள்ளுமாதலால், சும்மா இருப்போர் சங்கம், வெட்டிக்கதை பேசுவேர் நல வாரியம், இலவச் கலர் டிவி பார்ப்போர் இயக்கம், குடிமக்கள் கூட்டம், போன்ற இயக்கங்களைத் தொடங்கி மக்கள் நல பணிகளை சீரும் சிறப்புமாக செய்வது தமஅமுக வின் தீவிர கொள்கைகளில் ஒன்றாகும்.

இவ்வாறாக தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகவும், தமிழக மக்கள அதிவேகமாக முன்னேற வேண்டும் என்கிற உண்மையான கொள்கையுடனும் தேர்தல் களம் காணும் தமஅமுக விற்கு உங்கள் பொண்ணான வாககுகளையெல்லாம் வாரி வாரி வழங்குமாறு வேண்டுகிறோம்.

நமது கொள்கைகளுக்கு பெருத்தமாக தேர்தல் கமிஷனிடம் நாம் வேண்டிக் கேட்டுள்ள தேர்தல் சின்னம்....இதோ.

நன்றி...!!!
(தமஅமுக)

Wednesday, April 15, 2009

தேர்தல்

வணக்கமுங்க...,

"தேர்தல்"

சாலை வசதி,

சாக்கடை வசதி,

பள்ளிக்கூடம்,

பஸ் வசதி,

இவையெல்லாம் தருவதாய்ச்சொல்லி

இறுதியில் பீரும், பிரியாணியும்,

ஐம்பதும் மட்டுமே தந்து,

ஐந்தாம் முறையாக வெற்றிபெற்றோம்.

Sunday, April 12, 2009

அன்புசிவம் அவர்களின் மன நலம் பேணுவோம்

வணக்கமுங்க...,

வாழ்க வளமுடன்...!!!

நண்பர் அன்புசிவம் அவர்களின் "மன நலம் பேணுவோம்" என்கிற தொகுப்பினை இங்கே உங்களுக்காக இணைத்துள்ளேன்.
மன நலம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற அவரது முயற்சியில் என்னால் ஆன சிறு பங்களிப்பு.

இத்தொகுப்பைக் குறித்த உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை www.anbusivam.com என்கிற வலைப்பூவிலோ அல்லது sivupalani@gmail.com என்கிற அவரது மின்னஞ்சல் முகவரியிலோ பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

Anbusivam's Mana Nalam Penuvom
Anbusivam's Mana Nalam Penuvom Anbusivam


இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதியளித்த நண்பர் அன்புசிவம் அவர்களுக்கு என் நன்றிகள் பல.